திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திருமங்கலம் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் பி. கோபிநாத் மல்லியா நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் (மின்சாரம் மற்றும் இயந்திரவியல்), எஸ். கே. நடராஜன், கூடுதல் பொது மேலாளர் (மெட்ரோ ரயில் மற்றும் இயக்கம்) எஸ். சதீஷ் பிரபு மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் துணைக்கட்டிடத்துக்கு அருகில் தற்போதுள்ள பி-2 வாகன நிறுத்துமிடப் பகுதியில், கூடுதலாக ஒரு தளம், வாகன நிறுத்துமிடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக 400 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இதன் மூலம் B-2 வாகன நிறுத்துமிடத்தில் 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி ஏற்பட்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கி, மெட்ரோ சேவையை மேலும் எளிமையாகவும் திறம்படவும் பயன்படுத்த ஊக்குவிக்கும் என அவர்கள் கூறினர்.