சென்னை: விஜயகாந்த் இருந்திருந்தால் மாற்று அரசியல் - சீமான் பேச்சு

69பார்த்தது
சென்னை: விஜயகாந்த் இருந்திருந்தால் மாற்று அரசியல் - சீமான் பேச்சு
விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். 

மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அவர் பேசியதாவது, விஜயகாந்த் நினைவு தினத்தை ஒட்டி நடந்த அமைதி பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது அவசியமற்றது. இது விஜயகாந்திற்கு நடந்த அவமதிப்பாகவே கருதுகிறேன். மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் விஜயகாந்த். திரைத்துறையிலும் பல புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார். 

அவரால் வாழ்ந்தவர்கள் பலர். எல்லோரிடமும் சமமாகப் பழகுவார். அவர் இன்னும் 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாற்று சக்தி அரசியலை உருவாக்கி இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள் எனப் பேசியிருக்கிறார்.