சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராயபுரம் யானைகுளம் பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் (22) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்து 42 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சலாவுதீன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.