சென்னை எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளதாக தெரிவித்தனர்
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில், கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரில் சித்த மருத்துவராக உள்ள பாலசுப்பிரமணி (60), அந்த சிறுமியை தனது கிளினிக்குக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சித்த மருத்துவரான பாலசுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.