பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட 22 வயதுடைய வெகுளி பெண், கடந்த, 22ம் தேதி மாயமானார். அவரின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த, 24ம் தேதி நள்ளிரவு அந்த பெண், பரங்கிமலை பேருந்து நிறுத்தத்தில் அழுதபடி நின்றிருந்தார். இதையடுத்து, மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோர் விசாரித்த போது, பட்ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும் டோனாலி, 30, என்பவர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின், கோயம்பேடில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்து தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து கும்பகோணம் அழைத்து சென்று, அங்கு நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும், அப்பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பரங்கிமலை மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.
வழக்கு பதிந்த போலீசார், அந்த இளம் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவரிடம் பலர் தவறாக நடந்து கொண்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மொபைல் போன் எண் விபரங்கள், இருப்பிடம் அறிந்து, டோனாலியை, கும்பகோணத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர், விழுப்புரம் ராஜேந்திரன், சரண், கோடம்பாக்கம் விஜய், ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.