பெரம்பூர் எஸ்பிஐ காலனியை சேர்ந்தவர் முருகன். அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 21ம் தேதி அதிகாலை இவரது கடை பூட்டை உடைத்து 5 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோன்று, மதுரைசாமி மடம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (56), பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் அதே நாள் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவிக நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், ராயப்பேட்டை கோய அருணகிரி தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (22) என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் (டிசம்பர் 25) அவரை கைது செய்தனர். இவர் மீது வேப்பேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 26 குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு துணையாக இருந்த ராயப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.