சென்னை தியாகராயநகரில் நேற்று முன்தினம் இரவு பாண்டிபஜார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்து ரூ. 23.5 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், காஞ்சீபுரத்திற்கு சாமி கும்பிட வருவதாகவும், மிளகாய் வியாபாரியிடம் வரவேண்டிய பணத்தை வாங்கி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வருமானவரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வருமானவரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர தொழிலதிபர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.