பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை: பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது.
இதனை ஏற்று மார்ச் 17ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு எற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.