சென்னை – மும்பை ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்கள், போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மா. போ. கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஐபிஎல்-2025 கிரிக்கெட் போட்டி எம்ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் மார்ச் 23ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
போட்டி நடைபெறும் நாள் அன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்திடம் மா. போ. கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா. போ. கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் மா. போ. கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.