கனடாவில் பிரதமர் மார்க் கேர்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரி ஆனந்தசங்கரிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் பிரதமர் மார்க் கேர்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராகவும், கனடாவின் தலைமை வழக்கறிஞராகவும் பொறுப்பேற்றுள்ள எனது நண்பரும், ஈழத்தமிழருமான கேரி ஆனந்தசங்கரிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனடாவில் கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழர் ஒருவர் அந்த நாட்டின் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும். கனடாவின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆனந்த சங்கரி அந்தப் பதவிக்கு மிகவும் பொறுப்பானவராவார். கனடாவின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு என்னுடன் தொலைபேசி மூலம் ஆனந்தசங்கரி உரையாடினார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட நான், ஏற்றுக் கொண்ட பொறுப்பில் சாதனை படைக்கும்படியும், இலங்கை இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக தொடர்ந்து பாடுபடும்படியும் கேட்டுக் கொண்டேன். அதற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார் என அன்புமணி தெரிவித்துள்ளார்.