2027 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது.
எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பதுதான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை நடைபெற்றால் நாடாளுமன்றத்தில் 7.18% என்ற தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா? இல்லை, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப் போவதில்லை என்றால் 2026-இல் காலாவதியாகும் சட்டத்திருத்தத்திற்கு மாற்றாக மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைக்கும் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்படும்? பதில் சொல்லுங்கள் அமித் ஷா என அவர் தெரிவித்துள்ளார்.