சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பிரதான சாலை அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஒன்று போலீசாரை கண்டவுடன் திரும்பிச் செல்ல முயன்றது. அந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி பிடித்து சோதனையிட்ட போது குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன் (26), சென்னை பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த அப்பு (38), அஜித்குமார் (26) என்பவர்கள் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து ஆதம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 94 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.