சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்த நித்யாஸ்ரீ (26) என்ற இளம் பெண் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் நித்யாஸ்ரீ உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்டமாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் நித்யாஸ்ரீயை கொலை செய்து, அவர் தற்கொலை செய்ததுபோல் நாடகமாடியது சைதாப்பேட்டையில் வசித்து வந்த, மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ்குமாருக்கும், இறந்துபோன நித்யாஸ்ரீக்கும் ஏற்கெனவே கூடாநட்பு இருந்து வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு, சந்தோஷ்குமார், நித்யாஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவருக்கு மது கொடுத்து, அவர் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது, மசாஜ் செய்வதுபோல் தலையணையில் அவரது முகத்தை வைத்து அழுத்தி கொலை செய்ததும், கொலை என்று தெரியாமல் அது தற்கொலைபோல் இருக்க வேண்டும் என்பதற்காக நித்யாஸ்ரீ பயன்படுத்தும் மாத்திரைகளை சடலம் அருகே வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று சித்தரித்ததோடு, அவரது வீட்டிலிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.