தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அலெரியா எக்ஸ்ரே நிறுவனம் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று கோவையில் நடைபெற்றது. கணபதி அத்திப்பாளையம் பிரிவு சிக்னலில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஐயோடோம் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் லாவண்யா பிஜூ சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அலெரியா எக்ஸ்ரே நிறுவன மனிதவள மேலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது, செல்போன் பேசியபடி வாகனம் இயக்க கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
அத்திப்பாளையம் பிரிவு சிக்னலில் இருந்து தொடங்கிய பேரணி, சின்னவேடம்பட்டியில் உள்ள அலெரியா எக்ஸ்ரே நிறுவனம் வரை சென்றது. அங்கு உதவி கமிஷனர் சேகர் தலைமையில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் அலெரியா எக்ஸ்ரே நிறுவன ஊழியர்கள், போலீசார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.