கோவை: இந்தி ரிங்டோன் திணிப்புக்கு எதிர்ப்பு

64பார்த்தது
கோவை: இந்தி ரிங்டோன் திணிப்புக்கு எதிர்ப்பு
கோவையில் பிஎஸ்என்எல் தொலைபேசி அழைப்பு பாடலில் (Ringtone) இந்தி பாடல்களை ஒளிபரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியை திணிப்பதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. த. பெ. தி. க பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய கு. இராமகிருட்டிணன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து இந்தி பேசாத மக்கள் மீது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தியை திணித்து வருகிறது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகளில் இந்தி பாடல்களை ரிங்டோனாக ஒளிபரப்பி வருகிறது என்றார். இந்தி நமது சட்டைப் பைகளில் நுழைந்திருக்கிறது. ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்தியை நாம் கேட்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். கட்டணம் செலுத்தி வேறு பாடலை ரிங்டோனாக வைத்துக் கொள்வது குறித்து கேட்டால், நான்கு நாட்கள் இந்த இந்தி ரிங்டோனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர் என அவர் தெரிவித்தார்.