பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில் (எண்: 56110) நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 8 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு, 8.55 மணிக்கு போத்தனூர் சென்றடைந்து, 9.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயில் கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் என ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காலை 8 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில், ஜூலை 11-ம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு புறப்படும். அதுபோல, காலை 8.55 மணிக்கு போத்தனூர் சென்றடையும் ரயில், காலை 8.14 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மேலும், காலை 9.25 மணிக்கு கோவை சென்றடையும் ரயில், காலை 8.55 மணிக்கு கோவை சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. ரயில் நேரத்தை குறைத்து அறிவித்துள்ள இந்த மாற்றம் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.