கோவை அடுத்த கோவைப்புதூர் - புட்டுவிக்கி சாலையில் நேற்று கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய கார் எதிர்பாராதவிதமாக தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதிய கார் முட்புதருக்குள் பாய்ந்தது. ஆட்டோ தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு நின்றது. இந்த விபத்தில், ஆட்டோ டிரைவர் முகமது ரபீக்(34) அருகே இருந்த செங்குளத்தில் தூக்கி வீசப்பட்டார்.
ஆட்டோவில் இருந்த பயணி செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த சீனிவாசன்(55) என்பவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குனியமுத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது ரபீக் பரிதாபமாக இறந்தார். சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை ஓட்டி வந்த 19 வயது மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.