வால்பாறை அருகே கருமலை எஸ்டேட்டில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி வகுப்பறையை, இன்று அதிகாலை நேரத்தில் வந்த காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 20 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியின் வகுப்பறை கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டதுடன், உள்ளே இருந்த இருக்கைகள் மற்றும் மாணவர்களின் நோட்டு, புத்தகங்கள் ஆகியவையும் சேதமடைந்தன. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, எஸ்டேட் தொழிலாளர்களுடன் இணைந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் தொடர்ந்து அதே பகுதிக்குள் முகாமிட்டுவருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து, காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறை சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை நேரில் ஆய்வு செய்தனர்.