மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பாகுபலி என்ற காட்டு யானை வனத்துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் கல்லூரிக்குள் புகுந்து வனத்துறை வாகனத்தையும் தாக்கியது. இந்நிலையில், இன்று காலை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டபோது, வளாகத்தின் பின்புறம் யானைகள் கூட்டமாக நகர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.