கோவை: ஆண் காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு

கோவை, பெ. நா. பாளையம் தடாகம் வட்டாரத்துக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் மலையடிவாரப் பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. துடியலூர் பிரிவு, தடாகம் வடக்கு சுற்று நாத்துக்காடு சரக எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் யானை சடலம் கிடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், கோவை வனச்சரகர் திருமுருகன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்ட தகவல்களின்படி, உடல்நிலை பாதிப்பு காரணமாக யானை கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை இறப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை முடிவில் மட்டுமே தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
