கோவை, திருமலையம் பாளையம் அருகே உள்ள நேரு தனியார் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் இருந்ததால் 12 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இதில் 5 மாணவர்கள் மதுக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதியில் இட்லி, சட்னி, சாம்பார், ரவை கேசரி வழங்கப்பட்டபோது கேசரியில் புழு இருந்ததை மாணவர்கள் கண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிலர் வயிற்றுவலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பும் தேநீரில் பூச்சிகள் இருந்ததாக மாணவர்கள் புகார் அளித்திருந்ததாக தகவல். தற்போது அனைத்து மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கே. ஜி. சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.