புதுக்கோட்டை மாவட்டம் மேலபட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் கோவை சித்தாபுதூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்றார். அவர்கள் காந்திபுரம் 100 அடி ரோட்டில் சென்றபோது, ஒரே பைக்கில் 3 பேர் கும்பல் கையில் பீர் பாட்டிலுடன் அதிவேகமாக விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.
இதனை ராஜ்குமார் கண்டித்தார். திரும்பி வந்த 3 பேரும் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் பீர்பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 500ஐ பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜ்குமார் காட்டூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராஜ்குமாரை மிரட்டி பணம் பறித்தது குரும்பபாளையம் வடமதுரையை சேர்ந்த கவுதம் (28), தஞ்சாவூரை சேர்ந்த சுசிந்த்குமார் (23) மற்றும் ராஜ்குமார் (28) என தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.