கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு முன்பக்கம் உள்ள தெருவிற்கு செல்ல வேண்டுமானால் கோவில் பாதையை கடந்து செல்ல வேண்டும். இதனால் மக்கள் நிரந்தர சாலை கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மேற்படி கோவில் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவில் இருக்கும் இடம் தனிநபரின் பட்டா இடம் என சொல்லி அதன் உரிமையாளர் வேலையை நிறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் கோவில் இருக்கும் இடம் தனிநபரின் பட்டா என கோர்ட் மூலம் ஓ.எஸ். எண் வழங்கப்பட்டதின் நகலை காண்பித்து தனிநபரின் பட்டா இடத்தில் சாலை அமைக்க விடமாட்டேன் என தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் மேற்படி கிராம மக்கள் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.