தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ் ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நிலப்பத்திரத்தை மீட்டுத் தரக் கோரி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 4) மனு அளிக்க வந்தார். அப்போது தனது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனடியாக காவல் துறையினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் 60% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் அவருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.