ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் சில பூட்டப்பட்டும், பல அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடியிருந்தன. நூறு நாள் வேலைத்திட்ட கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரமாக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையின் கீழ் தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்தவேண்டும்.
தமிழக முதல்வரின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்டத்தில் தருமபுரி திட்ட இயக்குநர் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் 251 ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் 354 பேர் விடுப்பு எடுத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்த போராட்டத்தால் வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர் பிரிவு அலுவலர்கள் உள்பட்ட பெரும்பான்மை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பூட்டப்பட்டன. சில அலுவலங்கள் திறந்தும் வெறிச் சோடியிருந்தன.