இந்தியாவிலேயே காசிக்கு அடுத்து காலபைரவருக்கு தனி ஆலயம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதிகாலை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமிக்கு கணபதி ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், 18 வகையான அபிஷேகம் காலபைரவருக்கு நடைபெற்றன. பின்னர் ராஜ அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் ஆலயத்தை வலம் வந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்தனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தட்ஷன காசி காலபைரவரை வணங்கி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.