தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், தினசரி நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் மற்றும் 90-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவர்களின் கார்பஸ் நிதியின்கீழ் புதிய யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மேலும், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து இந்த புதிய பிரிவையும் சிலையையும் திறந்து வைத்தார். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் மருத்துவர்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.