குடிநீர் மற்றும் மயான பாதை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாடிக்கொம்பு அய்யம்பாளையம் பொதுமக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது:தாடிக்கொம்பு மல்வார்பட்டி அருகே தா. அய்யம்பாளையம் ஊரில் வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் இப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களது ஊரில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதி செய்யப்படவில்லை. கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மயானத்திற்கு சரியான பாதை வசதி இல்லாததால், எங்கள் பகுதியில் துக்க நிகழ்வு நடந்தால் பிணத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்குள் இரண்டு அடி ஆழத்திற்கும் மேல் உள்ள சகதிக்குள் இறங்கி பிணத்தை எடுத்துச் செல்லவேண்டிய உள்ளது. ஆகையால் கலெக்டர் எங்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மயானத்திற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும். என மனுவில் தெரிவித்து இருந்தனர்.