திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டது. நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி கிராமத்தில் 12 ஏக்கரில் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலம் அமைக்க வனத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இங்குள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பறவைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழக வனத் துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்மூலம், மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைத் தொடர்ந்து, தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலம் என்ற சிறப்பு காசம்பட்டிக்கு கிடைத்திருக்கிறது.