திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிக வெயிலும், இரவில் கடுமையான பனிப் பொழிவும் இருந்து வந்தது. வனப் பகுதியில் அடிக்கடி பற்றிய தீயை வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கட்டுப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், காலை முதல் அதிக மேகமூட்டம் காணப்பட்டது.
மேலும், காற்றுடன் மிதமான மழை பெய்தது. அப்சர்வேட்டரி, செண்பகனூர், பெருமாள் மலை, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் பூம்பாறை- கிளாவரை செல்லும் மலைச் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை, வனத் துறையினர் சென்று சாலையில் விழுந்த 2 மரங்களை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.