திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் வத்தலகுண்டு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் டோல்கேட் அமைக்கப்பட்டது.
நேற்று (மார்ச் 12) காலை சுற்றுப்புற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் டோல்கேட் பகுதியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் போராட்டமாக மாறி டோல்கேட்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி கூண்டுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
அங்குள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து டோல்கேட் திட்ட இயக்குனர் பிரவீன் குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்.
அதில் சுமார் 300க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத பொதுமக்கள் டோல்கேட்டை அடித்து நொறுக்கியதாகவும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது விசாரணையானது நடைபெற்று வருகிறது.