பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது. இந்தநிலையில் பேரூராட்சி 16வது வார்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வார்டில் உள்ள தெருக்கள், சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே குப்பைகளை அகற்ற முடிவு செய்து களத்தில் இறங்கினர். அதன்படி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சேர்ந்து சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்றினர். இவர்களுடன் வார்டு கவுன்சிலர் சரஸ்வதியும் கலந்துகொண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.