கோபி அருகே 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோபி அடுத்த தாசம்பாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்த நபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பழையபாளையம் சங்கநகரைச் சேர்ந்த கோகுல் (21) என்பவரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.12,500 மதிப்பிலான 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கோகுலை கைது செய்தனர்.