ஈரோடு குமலன்குட்டை, செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதித்யா (17), என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஆதித்யா பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுப் புறப்பட்டார்.
ஆனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலையில் பள்ளி அருகே உள்ள ஒரு பகுதியில் சாதாரண சீருடையில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஆதித்யா பெற்றோர் தகவல் அறிந்து அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். அப்போதும் மகனின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு மகன் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு ஆதித்யாவின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்தனர். தனது மகனைச் சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என ஆதித்யா பெற்றோர் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமாரனிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.