ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 24.12.2024 முடிய 714.14 மிமீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 98.46 அடியாகவும், 27.54 மி.கன அடி நீர் இருப்பும் உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 14.1 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 8.4 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 21.8 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 85.1 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இரசாயன உரங்களான யூரியா 6215 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 4813 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3381 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 9336 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.