கொடிவேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணை உள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக அருவியாக கொட்டுகிறது. இதனால் இங்கு குளிக்க ஈரோடு மட்டுமின்றி சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவது வழக்கம். சாதாரண நாட்களை விட விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழும் மக்கள் பின்னர் அங்கு சுடச்சுட மீனை சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடிவேரி தடுப்பணை வழியாக அருவியாக தண்ணீர் கொட்டாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் வழியாக கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.