ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது.
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த அண்ணா நகர் பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் நேற்று இரவு 10 மணியளவில் 3 காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள முதியோர் இல்லத்தின் தடுப்புச் சுவரையும் இரும்பு கேட்டையும் உடைத்தெறிந்தன. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் பீதி அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்து விவசாய உதவியுடன் யானைகளை 3 மணி நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
யானைகள் முதியோர் இல்லத்தில் புகுந்து தடுப்பு சுவரை சேதப்படுத்தி உள்ளே நுழைந்ததால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.