ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மதுவிற்பனை செய்வதை தடுக்க, போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை பகுதியில், ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் நேற்று முன்தினம் (மார்ச் 11) ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கே.ஜி. பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த சத்திவேல் (28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக, கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், எஸ்.எஸ்.ஐ திருலோகசந்தர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர். அதில், மது விற்பனை செய்தவர் பட்லூர் அடுத்த கொம்மியம்பட்டியைச் சேர்ந்த செல்வன் (53) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், ரூ.3,640 மதிப்பிலான 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.