கள்ளக்குறிச்சி: ஏலச்சீட்டில் ரூ. 2.60 கோடி மோசடி

65பார்த்தது
கள்ளக்குறிச்சி: ஏலச்சீட்டில் ரூ. 2.60 கோடி மோசடி
கள்ளக்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35); பா.ஜ., தரவுதள மேலாண்மை பிரிவு, முன்னாள் மாவட்ட தலைவர். இவரது மனைவி சூரியமகாலட்சுமி (35); முன்னாள் பா.ஜ., நகர தலைவர். இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு, பல்வேறு குழுக்களை கொண்டு, ஏலம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தினர். அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் அவர்களிடம் சீட்டு கட்டினர். இருவரும் கடந்த 2022ம் ஆண்டு வரை ஏலச்சீட்டு பணத்தை சரியாக கொடுத்தனர். அடுத்த ஆண்டில் இருந்து ஏலம் எடுத்தவர்களுக்கு, பணத்தை சரியாக தரவில்லை. அந்த பணத்திற்கான வட்டியை தருவதாக கூறினர். 

மேலும், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு பணம் பெற்று, அதிக வட்டிக்கு கொடுத்து வந்த தம்பதியினர், கடந்த 2024ம் ஆண்டு தலைமறைவாகினர். இந்நிலையில் சீட்டு கட்டி ஏமாந்த துரைராஜ் மனைவி கங்கா, (38) உள்ளிட்ட 54 பேர், ஏலச்சீட்டு நடத்தி, 2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 ரூபாயை ஏமாற்றியதாக எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இதுகுறித்து டி.எஸ்.பி., முத்துமணி, இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் விசாரித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சிவக்குமார், சூரியமகாலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று (மார்ச் 29) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி