கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மாணவர்கள் ஊக்கத்தொகை பெற, அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்பான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியர், ஊக்கத்தொகையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் பெறும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து கல்லூரிகளில் முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட சமூகநலஅலுவலர் தீபிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.