செய்யூரில் விவசாய நிலங்களில் தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள்

70பார்த்தது
செய்யூரில் விவசாய நிலங்களில் தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, வெடால் கிராமத்தில், செய்யூர் செல்லும் சாலையோரத்தில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வெடால் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம், 75, என்ற முதியவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள், தலையில் முட்டும் அளவிற்கு தாழ்ந்து செல்கின்றன. 

இதனால் விவசாய பணிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும், வயலில் நடந்து செல்லவே விவசாயிகள் அச்சப்படுகின்றனர். வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், தாழ்ந்து செல்லும் மின்கம்பிகளால் உயிரிழக்கும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாய நிலத்தில் விபத்து ஏற்படும் நிலையில் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை, உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி