செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் உள்ளதால், தற்போது 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தந்துள்ளன. நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே வரை சீசன் களைகட்டும் இந்த சரணாலயத்திற்கு, இலங்கை, பாகிஸ்தான், பர்மா, இந்தோனேஷியா, சைபீரியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் பறவைகள் வருகை தருகின்றன. நத்தைகுத்தி நாரை, பாம்பு தாரா, கூழை கடா, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 23 வகையான பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இந்த மாதத்திற்குள் மேலும் 20,000 பறவைகள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.