நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஹைதராபாத் உட்பட பல இடங்களில் நிறைவடைந்துள்ளது. தற்போது, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட இ.சி.ஆர்., பனையூர் பகுதியில் உள்ள ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் பேட்ஜ் ஒர்க் எனும் விடுபட்ட காட்சிகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று (மே 14) படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கானத்தூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.