உத்திரமேரூர் பராமரிப்பின்றி பழுதடைந்த சுகாதார நிலையம்

59பார்த்தது
உத்திரமேரூர் பராமரிப்பின்றி பழுதடைந்த சுகாதார நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில், கணபதிபுரம், கிடங்கரை, சத்யா நகர், பொற்பந்தல் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொற்பந்தல் கிராமத்தில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளி அருகே, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் உள்ளது. இந்த துணை சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, கர்ப்பிணிகள் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. 

தற்போது, துணை சுகாதார நிலைய கட்டடம், முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், துணை சுகாதார நிலையம், இரண்டு ஆண்டுகளாக, அங்குள்ள மகளிர் சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.