செய்யூர் அடுத்த கீழச்சேரி கிராமம், ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கல்பனா (28). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று (டிசம்பர் 27) காலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில், கல்பனா துணி துவைக்கச் சென்றார். இவருக்கு நீச்சல் தெரியாது. நீண்ட நேரமாகியும் கல்பனா வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றுக்கு சென்று பார்த்த போது, துணி உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அங்கு இருந்தன.
இதையடுத்து உறவினர்கள், செய்யூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கி, கொக்கி வாயிலாக கல்பனாவை சடலமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, செய்யூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.