காஞ்சிபுரம் அடுத்த கிளாரில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் என அழைக்கப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபட்ட அறம்வளர்நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு அகத்திய முனிவர், தன் மனைவி உலோபமுத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோவிலின் சிறப்பு பற்றி அறிந்த, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபாலப்பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில், 44 சிவனடியார்கள் இக்கோவிலுக்கு நேற்று வந்தனர்.
உலக நன்மைக்காக அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர யாகம் நடத்தி, மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இவர்களுடன் பழனி புலிப்பாணிச் சித்தர் ஆசிரமத்தின் நிர்வாகி கவுதம் கார்த்திக் மற்றும் பத்மா மகேஷ் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.