காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் அடுத்த, செல்லம்பட்டிடை ஊராட்சியில், எலுமியான்கோட்டூர் துணை கிராமத்திற்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்புக்குச் செல்லும் குழாய் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. குறிப்பாக, எலுமியான்கோட்டூர் கிராமத்தில் இருந்து, நரசிங்கபுரம் கிராமத்திற்குச் செல்லும் சாலையோரம் செல்லும் குழாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இதைச் சீரமைக்க சமீபத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். பள்ளத்தை சரியாக மூடவில்லை. மேலும், சேதத்தையும் சீரமைக்கவில்லை.
மேலும், அந்தச் சாலை வழியாக கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுதவிர, பழங்குடியினத்தவர்களின் வீடுகட்டும் இடத்திலும், குழாய் சேதத்தைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால், குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. கோடைக்காலங்களில் எலுமியான்கோட்டூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எலுமியான்கோட்டூர் - நரசிங்கபுரம் சாலை இடையே குழாய் சீரமைக்கத் தோண்டிய பள்ளத்தைச் சீரமைக்கவும், பழங்குடியினத்தவர்களின் வீடுகட்டும் இடத்தில் வீணாகச் செல்லும் தண்ணீரைக் கட்டுப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.