செங்கல்பட்டு: எல். எண்டத்துார் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

51பார்த்தது
செங்கல்பட்டு: எல். எண்டத்துார் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுபாக்கம் ஒன்றியம், எல். எண்டத்துார் ஊராட்சியில், உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நுழைவு வாயில் அருகில், சுற்றுச்சுவர் சேதமடைந்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன், பள்ளி நுழைவு வாயில் பகுதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் செல்ல சிறுபாலம் அமைக்கப்பட்டது. அப்போது, பள்ளிக்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்ல, மாற்று வழியாக, சேதமடைந்த சுற்றுச்சுவர் மேலும் பெரிதாக்கப்பட்டது.

தற்போது, சிறுபாலம் கட்டும் பணி முடிந்தும், சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. அதனால், இரவு நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில், மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் 'குடி'மகன்கள் புகுந்து மது அருந்தி விட்டு, காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதால், மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகம்சுளிக்கின்றனர். எனவே, பழுதடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி