காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, சீதாவரம் செல்லும் சாலையோரம் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் தெருக்கள் மண் சாலையாகவே உள்ளன.
இதனால், மழை நேரங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி ஏற்படும் சிக்கலால், தெருக்களில் நடந்து செல்ல அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். கடந்த 2024ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த குடியிருப்பில், இதுவரை கான்கிரீட் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பழங்குடியினர் குடியிருப்பில் வடிகால்வாய் வசதியும் இல்லை. எனவே, பழவேரி குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைத்து, வடிகால்வாய் வசதியை ஏற்படுத்த, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.