காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் -- சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலை, வண்டலூர் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் பிரதான தொழிற்சாலை பகுதியாக ஒரகடம் விளங்கி வருகிறது.
இங்குள்ள மேம்பாலத்தின் வழியே வண்டலூர் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையும், மேம்பாலம் கீழே சிறீபெரும்புதூர் -- சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலையும் செல்கிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. அதேபோல, ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு பேருந்து பிடித்து நாள்தோறும் ஒரகடம் வந்து செல்கின்றனர். அதேபோல, ஆண் ஊழியர்களுக்கு நிகராக பெண்கள், இளம் பெண்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ஒரகடம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள, ஏரிக்கரை டாஸ்மாக் அருகே மது அருந்துவோர், போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. இதனால், மாலை நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, பிரச்னைக்கு உரிய அந்த டாஸ்மாக்கை அங்கிருந்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.